UPDATED : ஜன 16, 2024 12:00 AM
ADDED : ஜன 16, 2024 11:56 AM
மதுரை:
நாட்டு மாடுகளை அழிவில் இருந்து காக்கும் விதமாக கோசாலை நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் அஜய்கார்த்திக் 34.மதுரை அருகே வில்லாபுரத்தைச் சேர்ந்த இந்தப் பொறியாளர் வேடர்புளியங்குளத்தில் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். நகரின் வாசம் இல்லாத கிராமப்பகுதியில் 1.25 ஏக்கரில் தனது நிறுவனம் போக மீதியுள்ள இடத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.இதைத்தொடர்ந்து நாட்டுமாடுகள் மீது ஆர்வம் ஏற்படவே அவற்றை பராமரித்து பாதுகாக்கும் எண்ணத்தில் பிருந்தாவனம்&' எனும் கோசாலையை நடத்தி வருகிறார். இதில் 21 மாடுகள் தற்போது உள்ளன. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால், வைகுண்டம் என்பவர் நாட்டு மாடுஒன்றை இவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்துள்ளார். அதை பராமரித்த போது அவருக்கு மேலும் மாடுகளை பராமரித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.உடல்நலக்குறைவு, வளர்க்க வழியில்லாதவை, கேரளாவுக்கு அடிமாடாக அனுப்புவது என்ற நிலையில் உள்ள நாட்டு மாடுகள் குறித்து தெரியவந்தால் அவற்றை விலைக்கு வாங்கி பராமரிக்கிறார். வளாகத்தில் இயற்கையான சூழலில் வளரும் மாடுகளை நம்பிக்கையானவர்கள் கேட்டால் இலவசமாக கொடுக்கிறார். அவர்கள் அதை முறையாக வளர்க்கிறார்களா என கண்காணிக்கிறார்.அஜய்கார்த்திக் கூறியதாவது:
இந்தப் பணிக்கு எனக்கு துாண்டுதலாக இருந்தவர்கள் முதன்முதலில் மாடு தந்த வைகுண்டம், வேடர் புளியங்குளத்தில் பெண்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்வி, தையல் பயிற்சி அளித்து வரும் சுகுணா, சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமகிருஷ்ணன் ஆகியோர்தான். சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோது இந்த எண்ணம் ஏற்பட்டது. மாதா அமிர்தானந்தமயி சிலஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தபோது அவருக்கு நாட்டுப் பசும்பால் கிடைக்காமல் சிரமப்பட்டு தேடி பெற்றனர். எனவே நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது.எனது நிலத்தில் எங்கள் தேவைக்குதான் காய்கறிகளை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்கிறேன். 2016 முதல் மாடுகளை வளர்த்தாலும், கடந்த 2 ஆண்டுகளாகத்தான் கோசாலையாக நடத்துகிறேன்.அழிவின் விளிம்பில் இருந்து நாட்டு மாடுகளை காப்பாற்றவே இந்த முயற்சியை மேற்கொள்கிறேன். என்னிடம் உம்பலசேரி, புலிக்குளம், கிர்ரகம், ஓங்கோல், காங்கேயம், கான்கரேஜ் ரக மாடுகள் உள்ளன. அவற்றுக்கு தீவனம் உட்பட மாதம் ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. பகலில் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்துவிடும். மாடுகளின் சாணத்தை இப்பகுதி விவசாயிகளுக்கு இலவசமாகவே வழங்குகிறேன். வருங்காலத்தில் மாட்டுச்சாணத்தில் இருந்து உபபொருட்களான விபூதி, ஷாம்பு, ஆயில் போன்றவற்றை தயாரித்து வழங்க எண்ணியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.