பெரியார் பல்கலையில் நிதி மோசடி உள்ளாட்சி தணிக்கை குழு ஆய்வு
பெரியார் பல்கலையில் நிதி மோசடி உள்ளாட்சி தணிக்கை குழு ஆய்வு
UPDATED : ஜன 19, 2024 12:00 AM
ADDED : ஜன 19, 2024 09:48 AM
சேலம்:
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில் அரசு அனுமதியின்றி பூட்டர் பவுண்டேஷன் துவங்கியதாக புகார் எழுந்தது. இதில் துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது கருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு சென்னை உள்ளாட்சி தணிக்கை குழு துணை இயக்குனர் நீலாவதி தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் பெரியார் பல்கலையில் ஆய்வு செய்து பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டனர்.குறிப்பாக துணைவேந்தர் செய்த செலவினம் அரசு அனுமதியின்றி துவங்கிய நிறுவனம் வாயிலாக நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர்.அதேபோல் பதிவாளர் செய்த கொள்முதல் விபரம் செலவினம் குறித்தும் ஆய்வு செய்தனர். அரசின் விதிமுறைக்குட்பட்டு பல்கலை செயல்படுகிறதா என்பதையும் தணிக்கை செய்தனர். இது இரவு 7:00 மணிக்கு நிறைவு பெற்றது.இரண்டாம் நாளாக இன்றும் பல்கலையில் தணிக்கை குழு ஆய்வு நடக்கிறது. இதற்கு பின் தணிக்கை குறித்து குழுவினர் அறிக்கை தயாரித்து அரசுக்கு வழங்க உள்ளனர். இது வழக்கமான ஆய்வு என்றபோதும் பல்கலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் மேற்கொள்ளப்படுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.