UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 05:07 PM
திருப்பூர்:
அதிநவீன பின்னலாடை உற்பத்தி இயந்திரங்களுடன், நிட்- டெக் கண்காட்சி, திருமுருகன்பூண்டியில் இன்று துவங்குகிறது.திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள ஹைடெக் இன்டர்நேஷனல் வளாகத்தில், 17வது நிட்- டெக் பின்னலாடை இயந்திர கண்காட்சி, இன்று துவங்குகிறது. காலை, 9:30 மணிக்கு நடைபெற உள்ள துவக்க விழாவில், நிட் - டெக் தலைவர் ராயப்பன் வரவேற்கிறார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், கண்காட்சி அரங்கை திறந்துவைக்கிறார். தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவர் அப்புக்குட்டி, கண்காட்சி வழிகாட்டியை வெளியிடுகிறார்; ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் பெற்றுக்கொள்கிறார்.அனைத்து வசதிகளுடன், சர்வதேச தரத்தில், இரண்டு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கில், கண்காட்சி நடைபெறுகிறது. உள்நாடு மற்றும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா உள்பட உலகளாவிய நாடுகளில் உயர் தொழில்நுட்ப பின்னலாடை உற்பத்தி இயந்திரங்கள் திருப்பூருக்கு வந்திறங்கியுள்ளன. நிட்- டெக் கண்காட்சியில், 325 ஸ்டால்களில், இயந்திரங்கள் அனைத்தும் முழு இயக்க நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், பேக்கிங் என, பின்னலாடை உற்பத்தி சார்ந்த அனைத்துவகை இயந்திரங்களும், கண்காட்சியில் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன.ஜெர்மனி நாட்டு தயாரிப்பில் உப்பு இன்றி சாயமேற்றுதலுக்கு கைகொடுக்கும் டையிங் இயந்திரம்; உயர் தொழில்நுட்பங்கள் நிறைந்த டிஜிட்டல் பிரின்டிங், ஓவல், ரோட்டரி பிரின்டிங் இயந்திரங்கள், ஆடை, துணிகளை சுமந்து செல்லும் ரோபோக்கள், சாயக்கலவை தயாரித்துக்கொடுக்கும் ரோபோட்டிக் ஆய்வகம் உள்பட செலவினங்களை குறைத்து, உற்பத்தியை பெருக்கும் தொழில்நுட்பங்கள்; இயந்திர உதிரிபாகங்கள் இடம்பெற்றுள்ளன.இக்கண்காட்சி, வரும் 4ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுகிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.பழையன கழிதல்... புதியன புகுதல்
உலகளாவிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும், நிட்-டெக் வாயிலாக உள்ளூரில் ஒரே இடத்தில் அணிவகுக்கச்செய்துவருகிறோம். திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் உலக நவீனமயமாக்கலை அறிந்து, தங்கள் நிறுவனங்களை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளவேண்டும். சர்வதேச அளவிலான வர்த்தக சவால்களை எதிர்கொண்டு, ஆடை தயாரிப்பு ஆர்டர்களை அதிகளவு வசப்படுத்த வேண்டும், என்பதே எங்கள் நோக்கம். இதன்மூலம், தொழில்முனைவோர், தொழிலாளர் வளம்பெறுவர்; நாட்டின் பொருளாதாரமும் உயரும்.- ராயப்பன், தலைவர், நிட் - டெக் கண்காட்சி. கொடிசியா போன்ற வளாகம் அவசியம்கோவையில் கொடிசியா வளாகம் உள்ளதால், மிகப்பெரிய கண்காட்சிகளைக்கூட சுலபமாக நடத்தி முடித்துவிடுகின்றனர். திருப்பூரில், இயந்திர கண்காட்சிகள் நடத்துவதற்கான திட்டமிட்டு கட்டப்பட்ட வளாகங்கள் இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் கண்காட்சி நடத்துவதற்காக, புதிதாக கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. நான்கு நாட்கள் பின்னலாடை இயந்திர கண்காட்சி நடத்துவதற்காக, எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒரு மாதம் வரை மிக கடினமாக உழைக்கிறோம். திருப்பூரில் 15 ஏக்கர் பரப்பளவில், அனைத்து வசதிகளுடன் கூடிய இயந்திர கண்காட்சி வளாகம் அமைக்கப்பட வேண்டும். கண்காட்சி நடத்துவது எளிதானால், மார்க்கெட்டிங்கில் அதிக கவனம் செலுத்த முடியும். மேலும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனத்தினரை பங்கேற்கச்செய்து, இன்னும் சிறப்பான மெஷின்களை திருப்பூருக்கு தருவிக்கலாம் என்கிறார் நிட்டெக் கண்காட்சி தலைவர் ராயப்பன்.

