இந்தியாவிற்கே பெருமை சேர்த்த தமிழர்: புதிய மருந்துக்கு உலக அளவில் அங்கீகாரம்
இந்தியாவிற்கே பெருமை சேர்த்த தமிழர்: புதிய மருந்துக்கு உலக அளவில் அங்கீகாரம்
UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 05:14 PM
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் செந்தில்குமார் கண்டுபிடித்த எக்ஸ்ப்லைஃபெப் என்ற மருந்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தற்போது விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை கிட்டியுள்ளது.பென்சிலின்
பென்சிலின் என்ற உயிர் காக்கும் மருந்தினை நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த இந்த மருந்து சிறந்த ஆன்டிபயாட்டிக்காக இருந்து வருகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காக்க இன்று வரை மருத்துவ உலகில் பயன்பட்டு வருகிறது.பென்சிலின் போன்ற மருந்துக்கு அடுத்தபடியாக தற்போது முனைவர் செந்தில்குமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எக்ஸ்ப்லைபெப் என்ற மருந்து சிறந்த உயிர் காக்கும் மருந்தாக செயல்படுகிறது. இம்மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (FDA)அங்கீகாரம் வழங்கி உள்ளது.அலெக்ஸாண்டர் பிளம்மிங் கண்டுபிடித்த பென்சிலின் இரண்டாம் உலகப் போரின் போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த பெருமளவு உதவியது. அச்சமயம் உயிரிழப்பு எளிதாக கட்டுப்படுத்தப்பட்டது. தொற்றுக்கு ஆளான பெண்களையும் குணப்படுத்த உதவியது.பென்சிலினுக்கு பிறகு நுண்ணுயிர்களால் உற்பத்தி செய்யப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் நிறைய கண்டுபிடிக்கபட்டன. தற்போது வரை 258 வகையான ஆன்டிபயாடிக் மருந்துகள் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 77 ஆண்டுகளாக நோய் தொற்றுக்காக பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளது.எக்ஸ்ப்லைபெப்
உலக அளவில் மொத்தம் 4,283 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. பல்வேறு நோய்களை குணப்படுத்த இம் மருந்துகள் பயன்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றில் ஒன்று கூட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். ஆனால், முனைவர் செந்தில் குமார் கண்டுபிடித்திருக்கும் எக்ஸ்ப்லைஃபெப் என்ற மருந்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவருடைய கண்டுபிடிப்பு தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.இந்தியாவில் இது வரை எந்த மருந்தும் இது வரை கண்டுபிடிக்கப்பட வில்லை என்று சொல்லிவிட முடியாது. உ.பி.,யில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் கருத்தரிப்பை தடுக்க உதவும் ஆர்மெலோக்சிபன் என்ற மருந்தினை கண்டுபிடித்தது. ஆனால், இந்த மருந்து இந்தியாவில் மட்டுமே விற்பனையில் உள்ளது. உலகின் மற்ற பகுதிகளில் இம்மருந்து விற்கப்படவில்லை.ஆனால், முனைவர் செந்தில்குமார் கண்டுபிடித்திருக்கும் மருந்து உலகின் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் முதல் இந்திய மருந்து. இது இந்தியாவுக்கே கிடைத்த பெருமை. இதன் மூலம் நம் நாட்டிற்கு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த மருந்தில் உள்ள சிறப்பு
எக்ஸ்ப்லைபெப் என்ற இந்த மருந்து சிறுநீர் குழாயில் பாக்டீரியாவினால் ஏற்படும் பல வகையான தொற்றுகளை நீக்குவதில் சிறந்து செயல்படுகிறது. நுரையீரலில் ஏற்படும் நிமோனியா போன்ற நோயை குணப்படுத்துவதிலும் நன்றாக செயல்படுகிறது. சிறுநீர்க்குழாய் தொற்றுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் மருந்தினை காட்டிலும் சிறப்பாக செயல்படுவதாக மருத்துவர்கள் பாராட்டி வருகின்றனர்.கண்டுபிடிப்பு எப்படி சாத்தியமானது
பாரதிதாசன் பல்கலையில் நைட்ரோ கெட்டிரோ சைக்ளிக் சேர்ம வகையைச் சார்ந்த வேதிப்பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார் செந்தில்குமார். இவை புற்று நோயை குணப்படுத்தும் மருந்தாகும். இந்த ஆராய்ச்சியின் போது தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வேதிப்பொருளை உருவாக்கும் கலையினை பேராசிரியர் ஜெயராமன் மற்றும் தன் உடன் ஆராய்ச்சி செய்த நண்பர்களிடம் கற்றுத் தேர்ந்தார் நம் முனைவர் செந்தில்குமார்.பின்னர் குஜராத் மாநிலத்தின் டோரன்ட் பார்மாவில் சில வருடங்கள் மருந்து ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார். இவரின் திறமைகளை கண்டு வியந்த தமிழகத்திலுள்ள ஆர்க்கிட் பார்மா என்ற நிறுவனம் இவரை பணியமர்த்தியது. சென்னை அருகே இயங்கி வரும் இந் நிறுவனத்தில் நுண்ணுயிர்களை அழிக்கப் பயன்படும் மருந்தினை கண்டுபிடிக்க பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டார். நீண்ட ஆராய்ச்சி மற்றும் உழைப்பின் காரணமாக இவருக்கு சிறந்த நிபுணத்துவம் கிடைத்தது.கனவை நனவாக்கினார்
உலகமெங்கும் பல்வேறு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும் ஆண்டுக்கு 12.7 லட்சம் பேர் நோய் தொற்றினால் உயிர் இழக்கின்றனர். இதற்கு காரணம் நோய் தொற்றினை உருவாக்கும் பாக்டீரியா, நோயாளிகள் சாப்பிடும் ஆன்டிபயாட்டிக் மருந்தினை செயல் இழக்க செய்யும் அளவிற்கு வல்லமை பெற்று விடுவது தான். இந்த ஆன்டிபயாட்டிக்கை செயல் இழக்க செய்வது பாக்டீரியாவால் உருவாக்கப்படும் பீட்டா லேக்டமேஸ் என்ற நொதி தான். இந்த நொதியை செயல் இழக்க செய்யும் மருந்தினை கண்டுபிடித்து விட்டால் பாக்டீரியாவை எளிதாக அழித்து விடலாம்.இந்த உண்மையின் அடிப்படையில் நொதியை செயல் இழக்க செய்யும் வேதிப்பொருளினை செந்தில் குமார் வடிவமைத்தார். கணினியின் உதவியால் இதை உறுதிப்படுத்திக் கொண்டார். ஆய்வுக்கூடத்தில் தன் குழுவினருடன் எக்ஸ்ப்லிபன் என்ற மருந்தினை 2005 ம் ஆண்டு உருவாக்கினார்.மூன்று கட்ட சோதனைகளிலும் வெற்றி
எலி போன்ற விலங்குகளுக்கு கொடுத்துப் பார்த்ததில் இம்மருந்தினால் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி படுத்தினர். அடுத்து மனிதர்கள் மீது நடந்த மூன்று கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்தன. ஐரோப்பிய நாடுகளில் நடந்த மூன்று கட்ட சோதனைகளுக்கு அடுத்து இம் மருந்து மனிதர்களுக்கு உகந்தது என்று ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் உறுதி செய்தது.மேற்கண்ட மூன்று கட்ட சோதனைகளுக்கான செலவுத் தொகையை அலக்ரா என்று ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டது. எக்ஸ்லிபன் என்று இந்த மருந்தினை சீனாவில் விற்பனை செய்ய அனுமதித்திருப்பதன் மூலம் மட்டுமே இந்திய ரூபாயில் அந்நிறுவனத்திற்கு 620 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்தது. இந்தியாவில் இந்த மருந்தின் விற்பனையின் முழு உரிமையும் ஆர்க்கிட் நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. இதனால், ஆர்க்கிட் பார்மாவின் சந்தை மதிப்பு 25 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.ஆர்க்கிட் போன்ற மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் வளர்வதால் நுண்ணுயிரியல் மற்றும் உயர் தொழில் நுட்பவியல் வேதியியல், பார்மசி படித்த மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் உப தொழில்கள் பெருகும்.பிற நாடுகளில் நம் நாட்டு மருந்துகளை விற்பனை செய்வதால் நம் நாட்டுக்கு பெரும் லாபம் கிடைக்கும். நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு உதவும் முனைவர் செந்தில்குமார் போல நிறைய பேர் உருவாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது.

