மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள்: தயார் நிலையில் 4 கல்லூரிகள்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள்: தயார் நிலையில் 4 கல்லூரிகள்
UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:16 AM
மதுரை:
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரியில் படித்து வரும் நிலையில் மதுரையிலேயே வகுப்புகள் நடத்த தங்கள் வளாகத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளுமாறு 4 கல்லுாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.மதுரை மாவட்டம் தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி ரூ.1264 கோடி திட்ட மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப் பிரிவு துவக்கும் வகையில் திட்ட மதிப்பீடு ரூ. 1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.ஜப்பானின் ஜெய்க்கா பன்னாட்டு கூட்டுறவு முகமை நிறுவனத்துடன் 2021 மார்ச்சில் கடனுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்த தொகையில் 82 சதவீதம் ஜெய்க்கா நிறுவனம் கடனாக தருவதாகவும், மீதி 18 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.2023 ஆகஸ்ட் 17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெற்ற நிலையில் 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கான கல்லுாரி சேர்க்கை நடந்தது.கட்டடம் இல்லாததால் ஆண்டுதோறும் 50 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் படிப்பை தொடர்ந்தனர். மூன்றாவது ஆண்டாக கல்லுாரி சேர்க்கை நடந்த நிலையில் மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் வகுப்பறை மற்றும் விடுதி வசதிக்காக வாடகை கட்டடம் வேண்டி 2024 ஜன.,10ல் டெண்டர் அறிவிக்கப்பட்டது. கட்டுமான பணி தொடங்க உள்ள நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநர் அனுமந்த ராவ் கூறியதாவது:
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் பயிற்சி பெற உள்ளதால் திருமங்கலத்தை சுற்றி 10 கி.மீ., சுற்றளவுக்குள் சகல வசதிகளுடன் கூடிய கல்லுாரியை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது நான்கு கல்லுாரிகள் வாடகைக்கு தர முன்வந்துள்ளன. மார்ச் இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஏப்ரலில் பணிகள் தொடங்கும் என்றார்.

