UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 10:14 AM
புதுச்சேரி:
பி.எம்., மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காக்கக்களை ஏற்படுத்த மத்திய அரசினை, புதுச்சேரி அரசு அணுகி முயற்சி எடுக்க வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் ரோடியர், பாரதி, சுதேசி ஆகிய 3 பஞ்சு மில்கள் இயங்கி வந்தன. இந்த மில்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ராணுவத்துக்கே சீருடைகள் தயாரித்து கொடுத்த பெருமை ரோடியர் மில்லுக்கு உண்டு. மாநிலத்தில் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாகவும் இந்த மில்கள் விளங்கி வந்தன. ஆலை தொழிலாளர்களின் சம்பள தேதியின் போது மில்களை சுற்றிலும் வியாபாரம் களை கட்டும்.போதிய வருமானம் ஈட்ட முடியாமல் தள்ளாடியதால் புதிதாக தொழிலாளர்கள் சேர்க்கப்படாததாலும், ஏற்கனவே பணியில் இருந்தவர்கள் விருப்ப ஓய்வு பெற்றதாலும் மில்களின் உற்பத்தி திறன் குறைந்தது. 3 ஷிப்டுகளிலும் சுறுசுறுப்பாக பணிகள் நடந்து வந்த நிலை மாறி இந்த மில்கள் நசிய தொடங்கின. சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்களுக்கு லே-ஆப் கொடுக்கப்பட்டது.இந்தநிலையில் மில்களை புனரமைத்து மீண்டும் வழக்கம்போல் செயல்படுத்தும் நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டது. இதற்காக நிதி கோரிய போது மத்திய அரசிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லாமல் போனது.இதையடுத்து ஆயத்த ஆடை பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை. இதனைதொடர்ந்து ரோடியர், சுதேசி, பாரதி மில்களுக்கு அடுத்தடுத்து மூடு விழாக்கள் நடத்தப்பட்டன.இதுபோன்ற சூழ்நிலையில் பி.எம்., மித்ரா திட்டத்தினை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தங்களுடைய மாநிலங்களில் ஜவுளி பூங்காக்களை ஏற்படுத்தி வருகின்றன.நாட்டின் முதலாவது பி.எம்.மித்ரா மெகா ஜவுளிப் பூங்காவை விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் 1,052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் ரூ.2,000 கோடியில் அமையும் இந்த மெகா ஜவுளிப் பூங்காவால் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மத்திய பா.ஜ., கூட்டணி அரசு ஆளும் புதுச்சேரியில் பி.எம்., மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காக்கள் ஏற்படுத்த முயற்சிக்கப்பட வில்லை. பி.எம்.மித்ரா பூங்காக்கள், வெளிநாட்டின் நேரடி முதலீடு உட்பட பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்க உள்ளதோடு ஜவுளித்துறைக்குள் புதுமையான மாற்றங்களை உண்டாக்கி உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.இந்த பூங்காக்கள் மூலம் 70,000 கோடி அளவிலான முதலீடு மற்றும் 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைந்தால் குறைந்தபட்சம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பி.எம்.,மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா ஏற்படுத்த குறைந்தபட்சம் 500 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.இதற்கான நிலத்தை விரைவாக புதுச்சேரி அரசு தேர்வு செய்து,மத்திய அரசினை அணுகி, புதுச்சேரியில் மெகா ஜவுளி பூங்காக்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

