கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்: பேராசிரியைகள், மாணவியர் தர்ணா
கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்: பேராசிரியைகள், மாணவியர் தர்ணா
UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 04:08 PM
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சந்திப்பில், அரசு உதவி பெறும் சவுடேஸ்வரி கலைக்கல்லுாரி உள்ளது. பாலியல் புகார் காரணமாக கடந்த, 10 நாட்களுக்கு முன், விடுப்பில் சென்ற கல்லுாரி முதல்வர் பாலாஜி, நேற்று பணிக்கு திரும்பியதையடுத்து, ஆவேசமடைந்த மாணவியர், ஒருசேர வகுப்புகளை புறக்கணித்தனர்.பின், கல்லுாரி நுழைவு வாயில் உட்புற பகுதிக்கு திரண்டு வந்து காலை, 10:00 மணிக்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாலியல் சீண்டலில் ஈடுபடும் கல்லுாரி முதல்வரை கைது செய்யக்கோரி, அவரது எதிராக கோஷமிட்டனர். தகவல் அறிந்து, கொண்டலாம்பட்டி போலீசார், முதல்வரை அழைத்து சென்று விசாரணை நடத்தியதால் பரபரப்பு உண்டானது.பேராசிரியைகள் கூறுகையில், பாலியல் சீண்டல் தொடர்பாக, முதல்வர் மீது, நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகும், கல்லுாரி நிர்வாகம், முதல்வர் பாலாஜிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. மீண்டும் அவரை, முதல்வர் பதவியில் அமர்த்த முடிவெடுத்திருப்பதால், தர்ணா போராட்டத்தில் மாணவியருடன் சேர்ந்து நாங்களும் ஈடுபடுட்டோம் என்றனர்.இரண்டு மணி நேர தர்ணா போராட்டத்துக்கு பிறகு, மாணவியர், பேராசிரியைகள் வகுப்புகளுக்கு சென்றனர். முதல்வர் பாலாஜி கூறுகையில், கல்லுாரி முறைகேடுகளை மறைக்கவே, என் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறுகின்றனர். குறிப்பாக நான், கண்டிப்புடன் செயல்படுவதால், பேராசிரியை பலர், எனக்கு எதிராக மாணவியரை துாண்டிவிட்டு, அவதுாறு பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக, எத்தகைய விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்றார்.

