25 பேருக்கு அகர முதலி விருது அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
25 பேருக்கு அகர முதலி விருது அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 09:23 AM
சென்னை:
செந்தமிழ் சொற்பிறப்பியல், அகரமுதலி திட்ட இயக்கக விருதுகளை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், துாய தமிழ் வளர்ச்சிக்கு உதவுவோருக்கான அகரமுதலி திட்ட இயக்கக விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அதில், தேவநேய பாவாணர் விருதை ப.அருளி; வீரமா முனிவர் விருதை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சச்சிதானந்தம் ஆகியோருக்கு, அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.நற்றமிழ் பாவலர் விருதுகளை, மரபுக்கவிதை பிரிவில், அரிமா பாமகனும், புதுக்கவிதை பிரிவில் கவுதமன் நீல்ராசுவும் பெற்றனர். மேலும், துாய தமிழ்ப்பற்றாளர் விருதுகளை, 21 பேர் பெற்றனர்.விருதுகளை வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், நமக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தாய் மொழியின் வாயிலாகவே சிந்தித்து சாதிக்கிறோம். அதனால், தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும். அதற்கு இந்த விருதுகள் துணை புரியும் என்றார்.விழாவில், திருக்கோவிலுார் கபிலர் நினைவுத்துாண் திறப்பு, தமிழ் ஒளியின் நுால்கள் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. தமிழ் பல்கலை துணைவேந்தர் திருவள்ளுவன், தமிழ் வளர்ச்சி துறை செயலர் சுப்பிரமணியன், உலக தமிழாராய்ச்சி நிறுவன பொறுப்பு இயக்குனர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.21 பேர் தான் தமிழ் பற்றாளர்களா?
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள் பேசுகையில், மாவட்டத்தில் ஒருவருக்கு துாய தமிழ் பற்றாளர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு, 21 மாவட்டங்களில் தான் தகுதியானோர் கிடைத்தனர் என்றார். இதுபற்றி, தமிழறிஞர்கள் கூறுகையில், பொதுவாக தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்புகள், தமிழறிஞர்களை சென்றடைவதில்லை. தமிழகத்தில் தமிழ்ப் பற்றாளர்கள் இல்லை என்பது, தமிழ் வளர்ச்சித் துறைக்கு அவமானம். மாநில அளவிலான விருதளிப்பு நிகழ்ச்சியில், உலக தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்கள் மட்டும் பங்கேற்றது அதிர்ச்சி அளிக்கிறது என்றனர்.

