தந்தை இறந்த துக்கத்திலும் பொது தேர்வு எழுதிய மாணவர்
தந்தை இறந்த துக்கத்திலும் பொது தேர்வு எழுதிய மாணவர்
UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 09:26 AM
கூடலுார்:
கூடலுார் அருகே, தந்தை இறந்த துக்கத்திலும், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பின், இறுதி சடங்கில் மகன் பங்கேற்றார்.கூடலுார் இரண்டாவது மைல் வேடன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன், 59. இவர் கூடலுார் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில், பால் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் மகன் தருண், கூடலுார் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி வருகிறார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். குடும்பத்தில் ஈடு செய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தியது.எனினும்,. அவரின் மகன் கல்வி பாதிக்க கூடாது என்பதை உணர்ந்த உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பொதுத்தேர்வு எழுதிவிட்டு இறுதி சடங்கில் பங்கேற்ற, அவர் மகனுக்கு ஆலோசனை வழங்கினர்.அதனை ஏற்று, துக்கத்திலும் அவர் மகன் பள்ளி தேர்வு மையத்துக்கு சென்று, கணினி அறிவியல் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி முடிந்த பின், சக மாணவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.