10ம் வகுப்பு மாணவர்களுக்கு பஸ் நிலையத்தில் வகுப்பு
10ம் வகுப்பு மாணவர்களுக்கு பஸ் நிலையத்தில் வகுப்பு
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:31 AM
சென்னை:
பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 650க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, போதிய வகுப்பறைகள் இல்லை. தற்போது, 11 மற்றும் 12ம் வகுப்புக்கு தேர்வு நடைபெறுகிறது.இதனால், 10வது உள்ளிட்ட இதர வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கு மதியத்திற்கு மேல் பாடம் நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் பிரிவில்45 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இவர்களில் மாணவர்களுக்கு மட்டும், நேற்று காலை முதல் வகுப்பு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், 9:00 மணி முதல் பள்ளி வாசலில் நின்றனர்.பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லாததால், பெரும்பாக்கம் பேருந்து நிலையத்தில், மாணவர்களை அழைத்து சென்று பாடம் நடத்தப்பட்டது. பயணியர் நடமாட்டம், பேருந்து இரைச்சல் காரணமாக, பாடத்தை கவனிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.இதுகுறித்து, பெற்றோர்கள் கூறியதாவது:
மாணவிகளை தவிர்த்து மாணவர்களை மட்டும் அழைத்து பாடம் நடத்தியுள்ளனர். தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இடையே ஒற்றுமையில்லை. இதனால், மாணவ - மாணவியர் படிப்பு பாதிக்கிறது. கல்வித்துறை தலையிட்டு, பள்ளியில் நடைபெறும் குளறுபடிகளை களைய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.