UPDATED : மார் 15, 2024 12:00 AM
ADDED : மார் 15, 2024 05:35 PM
திருப்பூர்:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில், குடும்பத்தினரோடு இணைந்து திறமையாக தொழில் நடத்துவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.இதில், எஸ்.பி., ஜெயின் ஸ்கூல் ஆப் குளோபல் மேனேஜ்மென்ட் பேராசிரியர் சமீஷ் தலால் பேசியதாவது:
குடும்பத்தினரோடு தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கு தைரியம் மிக அவசியம். குழந்தைகளின் முடிவுகளுக்கு, தந்தை ஒருபோதும் தடை விதிக்க கூடாது. பெற்றோர் சொல்வதை கேட்காமல் தொழில் துவங்கிய பலர், வெற்றி அடைந்திருக்கின்றனர்.மகன் அல்லது மகள், பெற்றோர் சொல்வதை கேட்காமல் தொழில் துவங்கி, ஒருவேளை தோல்வி அடைந்தாலும்கூட, நான் அப்போதே சொன்னேன் கேட்டாயா என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.இத்தகைய வார்த்தைகள் குடும்ப தொழில் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. குடும்ப தொழில் சாம்ராஜ்யத்தில் வெற்றியடைந்தோர் பெரும்பாலானோர், ஏராளமான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டிருப்பர்.இளைய தலைமுறையினரின் பரிசோதனைகளுக்கு பெற்றோர் செவிசாய்க்க வேண்டும். தொழில் சார்ந்த பரிசோதனையில் தோல்வி அடைந்தாலும்கூட, மீண்டெழும் தைரியமும், திறனும் கிடைத்துவிடும்.நிறுவனங்களில் திறமையானவர்களை அந்தந்த இடங்களில் பணி அமர்த்தவேண்டும். உடல் மொழியை நன்றாக பயன்படுத்த தெரிந்திருப்பது அவசியம். நம்பிக்கையானவர்கள், திறமைசாலிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

