ஊரை விட்டு 7 குடும்பங்கள் விலக்கி வைப்பு: பள்ளி குழந்தைகள் கதறல்
ஊரை விட்டு 7 குடும்பங்கள் விலக்கி வைப்பு: பள்ளி குழந்தைகள் கதறல்
UPDATED : ஜூலை 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.
ராமநாதபுரம் அருகே பேராவூரில் வசிக்கும் நாகமுத்துவின் தாயார் பஞ்சவர்ணம் நான்கு மாதத்துக்கு முன் இறந்தார். இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் இல்லாததால், அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம், ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் உதவி செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம நிர்வாகிகள், மறுநாள் நடந்த ஊர் கூட்டத்தில் முருகானந்தம், ஆறுமுகம், சேகர், மலைச்சாமி, கார்த்திகைராஜ், வெள்ளூர், சுரேஷ் ஆகியோரை ஊரை விட்டு விலக்கி வைத்தனர். இவர்களுக்கு எந்த பொருட்களும் கொடுக்கக்கூடாது என, கடைகளுக்கு உத்தரவிட்டனர். கிணறு, குடிநீர் குழாய்களில் தண்ணீர் எடுக்க கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்தனர்.
முருகானந்தத்தின் மகள் பிரியங்கா(7) இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர் ஊர் கட்டுப்பாட்டுக்கு பயந்து வராமல் இருந்ததால், பிரியங்கா பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல் பேராவூர் அரசு ஆரம்ப பள்ளியில் படித்து வந்த நான்கு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே முருகானந்தத்தின் மாமனார் நான்கு நாட்களுக்கு முன் இறந்து விட்டார். ஊர் கட்டுப்பாடு காரணமாக இவரது உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டு நாள் பிணத்தோடு அந்த குடும்பத்தினர் அழுது கொண்டிருந்தனர்.
அதன்பின் கிராம நிர்வாகிகளிடம் ரூ. ஆயிரத்து 100 அபராதம் கட்டி உடலை தூக்கி சென்றுள்ளனர். வாழ வழியில்லாத நிலையில் தவித்த இக்குடும்பத்தினர், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.
கலெக்டர் கிர்லோஷ் குமார் கூறுகையில், ‘ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் விலக்கி வைத்தவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., பூங்கொடியிடம் அறிவுறுத்தியுள்ளேன். ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் இந்த புகார் மனு மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
