UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள ஐக்கிய கல்வி அறக்கட்டளை நலிவுற்ற ஏழை மாணவ-மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கி வருகிறது.
ஐக்கிய கல்வி அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. விழாவில், மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பழனிச்சாமி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர் ஸ்ரீதர், புதுக் கல்லூரி முதல்வர் அல்டாப், மாநகராட்சி ஆறாவது மண்டல தலைவர் காமராஜ் ஆகியோரை ஐக்கிய கல்வி அறக்கட்டளையின் தலைவரும், கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளியின் முதல்வருமான சதீஷ் கவுரவித்தார்.
ஐக்கிய கல்வி அறக்கட்டளையின் சார்பில், நலிவுற்ற 48 ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நோட்டுப் புத்தகங்களை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் வழங்கினார்.
அறக்கட்டளை உறுப்பினர் அப்துல்கபூர் வரவேற்றார். நிர்வாக உறுப்பினர் ஷேக் அலாவூதின், ஐக்கிய கல்வி அறக்கட்டளையின் செயல்பாடுகளை விளக்கினார். ஹரிணி ஸ்ரீதர் நன்றி கூறினார்.