ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கல்வி பணியாற்ற மீண்டும் அழைப்பு
ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கல்வி பணியாற்ற மீண்டும் அழைப்பு
UPDATED : ஆக 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: அரசு கல்லூரிகளில் காலிப் பணியிடங்களில் பணியாற்ற ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் முன்வரலாம் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 11 அரசு கல்லூரிகள் உள்ளன. தற்போது அரசு கல்லூரிகளில் ஷிப்டு முறையில் இயங்குவதால் ஏராளமான பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். மாணவர்களின் நலன்கருதி அரசும், ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நாடி வருகிறது.
62 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில், பென்ஷன் தவிர மீதித் தொகை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியிட்ட போது 54 பணியிடங்களுக்கு பேராசிரியர்கள் பணியாற்ற முன்வந்துள்ளனர்.
இவர்களில் முன்னாள் முதல்வர்கள், துறைத் தலைவர்கள், நீண்ட அனுபவம் மிக்கவர்கள் வந்துள்ளனர். மீதியுள்ள 48 பணியிடங்களுக்கும் பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆங்கில பாடத்திற்கு 5 பேர், இயற்பியல்-7, வேதியியல்- 8, விலங்கியல்- 2, தாவரவியல்-3, கம்ப்யூட்டர் சயின்ஸ் 7, கணக்கு- 5, வணிகவியல்-3, புவியியல், வரலாறு பாடங்களுக்கு தலா 1 பேராசிரியரும் தேவைப்படுகின்றனர். கம்ப்யூட்டர் பாடத்திற்கு கணிதம் அல்லது இயற்பியல் பாடத்துடன் பி.ஜி.டி.சி.ஏ., படித்த பேராசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
மதுரை மண்டல கல்லூரி கல்வித்துறை இணைஇயக்குனர் செ.பாண்டி கூறுகையில், ‘ஏற்கனவே விண்ணப்பித்த அனைவருக்கும் பணிவாய்ப்பு வழங்கப்பட்டு, கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.
மீதியுள்ள இடங்களுக்கும் 62 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். உடனுக்குடன் பணிவாய்ப்பு வழங்கப்படும்’ என்றார்.