UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியர் ஆகஸ்ட் 8ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கல்லூரி ஆக.,17ம் தேதி வரை மூடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, மருத்துவ கல்லூரி, நர்சிங் கல்லூரி, பாராமெடிக்கல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை ஒன்றிணைத்து தனியார் ஒருமை பல்கலையாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கல்லூரி மாணவ,மாணவியர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இக்கல்வி நிறுவனங்களை பல்கலையாக தரம் உயர்த்துவது பற்றிய கருத்து கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 7ல் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் கேட்டை பூட்டிக் கொண்டு, அரசு உதவி பெறும் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியர் 800க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர்.
இந்த போராட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின் கல்லூரி செயலாளர் சம்பத்குமார், கல்லூரி முதல்வர் ஷீலா ராமச்சந்திரன் ஆகியோர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் வரும் ஆக.,17ம் தேதி வரை கல்லூரியை மூடவுள்ளதாகவும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் அனைவரும் உடனே கிளம்பி செல்லும் படியும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து வெளியூரைச் சேர்ந்த மாணவ, மாணவியர் விடுதியை காலி செய்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.

