நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் மீது வழக்கு
நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் மீது வழக்கு
UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருநெல்வேலி: போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் தனியார் சட்டக்கல்லூரி துவங்க அனுமதியளித்ததை கண்டித்து நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய மறியல் போராட்டத்தின் போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.
போலீசார் தடியடியிலும், மாணவர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில் 10 மாணவர்களும், 6 போலீசாரும் காயமுற்றனர். பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் புகாரின் பேரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஜெய்சங்கர், ராஜ்குமார், சார்லஸ், சுரேஷ், கண்ணன், ராஜா, ஜெயமுருகன், கார்த்திக், கல்யாணி, சங்கரபாண்டியன், செல்லத்துரை, செல்வம், குருபரன், அலைன், நந்தகுமார், காமராஜ், சிலுவை ஆகிய 17 பேர் மற்றும் பெயர் குறிப்பிடாத 33 பேர் என மொத்தம் 50 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே சம்பவத்தில் காயமுற்ற மாணவர்கள் தரும் புகாரின் பேரிலும் வழக்குபதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
காமிரா பை பறிப்பு: நெல்லை போலீசில் புகைப்படக்காரராக இருக்கும் சங்கரபாண்டியன் சட்டக்கல்லூரியில் நடந்த தடியடி, கல்வீச்சு சம்பவங்களை போலீசின் ஆவணத்திற்காக வீடியோவாகவும், போட்டாவாகவும் பதிவு செய்திருந்தார்.
அவர் ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 8 மணிக்கு பாளையங்கோட்டையில் பைக்கில் வந்தபோது அவரது மீது மோதுவது போல பைக்கில் வந்த ஒருவர் சங்கர பாண்டியனிடம் இருந்த காமிரா பையை பறித்துக்கொண்டு தப்பி விட்டார்.
சங்கரபாண்டியனும் அங்கிருந்தவர்களும் அந்த பைக் நபரை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. போலீஸ் வயர்லெஸ் மைக்கில் கூறி செக்போஸ்ட்களில் சோதனை நடத்தப்பட்டது. இரவு வரையிலும் குற்றவாளி பிடிபடவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

