UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:30 PM
ஹாசனை சேர்ந்த மூத்த இலக்கியவாதியும், புகழ்பெற்ற எழுத்தாளருமான பானுமுஷ்தக், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல புத்தகங்களை எழுதியவர்.
இதில் ஹசீனா மற்றும் அதர் ஸ்டோரிஸ் என்ற புத்தகத்தை, கன்னட மொழியில் எழுதினார். இதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி என்பவர், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதற்கு ஹார்ட் லேம்ப் எனும் பெயரிட்டார். இப்புத்தகம், இன்றைய உலகில் வாழும் மனிதர்களின் குணாதிசயங்களை விளக்குகிறது. ஆங்கிலத்தில் வெளியான போது, அதிகம் பேசப்படும் புத்தகங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
இதன் காரணமாக தி இங்கிலிஷ் பெண் 2024 என்ற விருதையும் பெற்று பெருமை சேர்த்தது. மேலும், சர்வதேச அளவிலான புக்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெண் எழுத்தாளர்கள், ஆங்கில மொழியில் எழுதும் சிறந்த புத்தகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருது, குறிப்பிட்ட நாடுகளில் வெளியாகும் புத்தகங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 2013 முதல் உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும், போட்டியில் பங்கேற்கலாம் என கூறப்பட்டது.
கடந்த பிப்ரவரியில், புக்கர் விருது பட்டியலில் 153 புத்தகங்கள் சேர்க்கப்பட்டன. இதில், பானு முஷ்தக்கின் ஹார்ட் லேம்ப் புத்தகமும் இடம் பெற்றது. இதன் பின்னர், பல கட்ட தேர்வுகளுக்கு பின், ஆறு புத்தகங்கள் மட்டும் தேர்வு ஆகின. அதில் ஒன்று, ஹார்ட் லேம்ப் புத்தகம்.
இப்புத்தகம் மாநில அளவை தாண்டி, தேசிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மே 21ம் தேதி லண்டனில் புக்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது.
இதில், விருது பெறும் புத்தகத்தின் பெயர் அறிவிக்கப்படும். விருது எழுத்தாளருக்கு 56 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். புக்கர் விருதை பெறுபவர் யார் என்பதற்கு இன்னும், 40 நாட்கள் காத்திருக்க வேண்டும்.