பென்னிகுவிக் பிறந்தநாள் விழா நாளை கொண்டாட்டம் - களை கட்டியுள்ள மணிமண்டபம்
பென்னிகுவிக் பிறந்தநாள் விழா நாளை கொண்டாட்டம் - களை கட்டியுள்ள மணிமண்டபம்
UPDATED : ஜன 14, 2026 02:16 PM
ADDED : ஜன 14, 2026 02:19 PM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்த நாளான ஜன., 15ஐ தமிழக விவசாயிகள் பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். நாளை நடைபெறும் விழாவிற்காக லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் களை கட்டியுள்ளது.
“இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதை தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை”, என்று கூறிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் பல்வேறு சிரமங்களுக்கு நடுவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தமிழக விவசாயிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றார்.
அணை கட்டுமானம்
பென்னிகுவிக் 1841, ஜன., 15ல் மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் பிறந்தார். பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவருக்கு முல்லைப் பெரியாறு அணையை கட்டும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசு வழங்கியது. அதன் அடிப்படையில் அணை கட்ட வேண்டிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள இடத்தை தேர்வு செய்து முல்லையாறும், பெரியாறும் இணையும் இடத்தில் 1885ல் சர்வே பணியை முடித்து கட்டுமான பணிகளை துவக்கினார். அணை கட்டுவதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல் ஏற்பட்டாலும் பென்னிகுவிக் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அணையை கட்டி முடித்தார்.
1895 அக்., 10 மாலை 6 மணிக்கு சென்னை கவர்னர் லாடு வென்லாக் அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் தென் தமிழகத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பாசன வசதி பெற்று வருகிறது. மக்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வருகிறது.
மணிமண்டபம் இவரது பிறந்த நாளான ஜன., 15 பொங்கல் விழாவாக தமிழக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். இவருக்காக லோயர்கேம்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு, இவரது பிறந்தநாளை 2019 முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு தரப்பில் இருந்து வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்து ஏற்பாடுகள் நடந்துள்ளது.
அனைத்து விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து கூடுதல் பொங்கல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் பென்னிகுவிக் மணிமண்டபம் தற்போதே களை கட்டத் துவங்கியுள்ளது. பென்னிகுவிக், 1911 மார்ச் 9ல் லண்டனில் இறந்தார். இன்றும் தமிழக விவசாயிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

