பாலியல் புகார்களை விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் மகேஷ்
பாலியல் புகார்களை விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் மகேஷ்
UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 04:48 PM

சென்னை:
பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து என எந்த தவறுகளும் இல்லாமல் பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் மொத்தமாக 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 பேர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாணவிகள் 12 லட்சத்து 93 ஆயிரத்து 494, 12 லட்சத்து 14 ஆயிரத்து 379 மாணவர்களும், 48,987 தனித்தேர்வர்கள், சிறைவாசி தேர்வர்கள் 585 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
போக்சோ தொடர்பாக இந்தக் கூட்டத்திலும் ஆலோசனை செய்தோம். பாலியல் புகார்கள் எழாத வண்ணம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி அரசியல் செய்ய இடம் கொடுக்கக் கூடாது. பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் கூறினார்.

