UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 11:39 AM
பெங்களூரு:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முறைகேடுகளை கண்டறிய முதன் முறையாக, ஏ.ஐ., எனும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்த, கர்நாடக தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக தேர்வு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பாண்டு மார்ச் 21ல், மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. இதற்காக கர்நாடக தேர்வு ஆணையம் தயாராகிறது. மாநிலத்தின் அனைத்து மையங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
இந்த காட்சிகளின் அடிப்படையில் தவறுகளை கண்டறிய இம்முறை ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த, தேர்வு ஆணையம் முடிவு செய்துள்ளது. மாநில அளவிலான அதிரடிப்படையினர், தேர்வு நடக்கும் நாட்களில், ஆன்லைன் வழியாக உன்னிப்பாக கண்காணிப்பர். இம்முறை தாலுகா அளவிலும், அதிரடிப் படை அமைக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் இறுதியில் பாடங்கள் முடிக்கப்பட்டன. படிப்பில் பின் தங்கியவர்கள் உட்பட, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, தேர்வு ஆணையத்தின் விருப்பம்.
இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பாடத்திலும், தலா ஐந்து மாதிரி வினாத்தாள்களை தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இவற்றை வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.