UPDATED : ஜூன் 28, 2026 12:31 PM
ADDED : ஜூன் 28, 2026 12:33 PM
திருப்பூர்:
தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்குக் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பிரத்யேக 'நீட்' பயிற்சிகளைத் துவங்கிவிடுகின்றன.
இதற்கு இணையாக, அரசுப்பள்ளி மாணவர்களையும் தயார்படுத்தும் நோக்கில் முந்தைய ஆட்சிக்காலங்களில் இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் பயனாக, 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் இச்செயல்பாடு சிறப்பாக இருந்தது.
நடப்பு கல்வியாண்டில், அரசுப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்களில், மருத்துவப் படிப்பில் யாருக்கெல்லாம் ஆர்வம் இருக்கிறது என்ற விபரங்கள் ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
வட்டார அளவில் இம்மாணவர்களின் பட்டியல் தயாரானதும், அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 'நீட்' பயிற்சி வகுப்புகள் தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
