உதவித் தொகையை உயர்த்த வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
உதவித் தொகையை உயர்த்த வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
UPDATED : ஆக 15, 2024 12:00 AM
ADDED : ஆக 15, 2024 10:41 AM
புதுச்சேரி:
ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு முதல்வர் அறிவித்தது போல் ஊக்கத் தொகை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா பேசினார்.
ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது:
மாகி ராஜிவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் மருத்துவம் பயின்று 5 ம் ஆண்டில் ஒரு வருட பயிற்சி காலத்திற்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., பயிற்சி பெறும் மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இதனால் ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் தங்களுக்கும் ஊக்கத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அக்கல்லுாரியில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி ஊக்கத் தொகையை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இதுவரை அரசு அந்த மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகையும் மாதா மாதம் வழங்காமல், ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.
ஆகவே, ஆயுர்வேத மருத்துவ மாணவர்களுக்கு உயர்த்தி வழங்குவதாக அறிவித்த ரூ. 20 ஆயிரம் ஊக்கத் தொகையை முதல்வர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக இந்த அவையில் உறுதியளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.