UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 09:49 AM
சென்னை:
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பட்ட மேற்படிப்பு முடித்த ஒப்பந்த டாக்டர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் அறிக்கை:
மருத்துவக் கல்லுாரிகளில் ஒப்பந்த டாக்டர்களாக, பட்ட மேற்படிப்பு மாணவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காலியிடங்களுக்கு, 100க்கும் மேற்பட்ட சீனியர் அரசு டாக்டர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு பொது கவுன்சிலிங் நடத்தாமல், ஒப்பந்த அடிப்படையில், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு கட்டாய பணி வழங்குவது ஏற்க முடியாது.
இந்த ஆணையை, மருத்துவ கல்வி இயக்ககம் திரும்ப பெற வேண்டும். கட்டாய பணி டாக்டர்களை, மருத்துவம் மற்றும் ஊரக நல இயக்குனரகத்தின் கீழ் பணியமர்த்த வேண்டும். ஒப்பந்த டாக்டர்களை, டி.எம்.எஸ்., இயக்குனரகத்தின் கீழ், புறநகர் மருத்துவமனைகளில் பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.