கல்லுாரியில் விடுதி வசதியில்லை; வெளியூர் மாணவர்கள் தவிப்பு
கல்லுாரியில் விடுதி வசதியில்லை; வெளியூர் மாணவர்கள் தவிப்பு
UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 09:48 AM
வால்பாறை:
வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர் விடுதி இல்லாததால், வெளியூர் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறையில் கடந்த, 2006ம் ஆண்டு முதல் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வந்தது. கடந்த, 2020ல் அரசு கலைக்கல்லுாரியாக மாற்றப்பட்டது. கல்லுாரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். சமீப காலமாக, மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் சரிந்து கொண்டே வருகிறது.
தற்போது, பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ், 937 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த கல்வியாண்டில், 520 இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், 323 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
விடுதி வசதி இல்லாததால் வெளியூர் மாணவர்கள் கல்லுாரியில் சேர தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.
கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
வால்பாறையில் மக்கள் தொகையும் ஆண்டு தோறும் சரிந்து வருகிறது. அரசு கலைக்கல்லுாரியில் மாணவிகளுக்கு தனியாக விடுதி வசதி உள்ளது. ஆனால், மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை.
இதனால், தொலை துார பகுதியில் இருந்து வரும் மாணவர்கள், தற்காலிகமாக கல்லுாரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவே வெளியூர் மாணவர்கள் அதிக அளவில் கல்லுாரியில் சேர்ந்து படிக்கும் வகையில், அரசு சார்பில், விடுதி வசதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.