நாளை துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு விழுப்புரத்தில் 22,516 பேர் எழுத ஏற்பாடு
நாளை துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு விழுப்புரத்தில் 22,516 பேர் எழுத ஏற்பாடு
UPDATED : மார் 01, 2026 12:34 PM
ADDED : மார் 01, 2026 12:48 PM

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் 109 மையங்களில் 22,516 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுக்காக, திண்டிவனம் கல்வி மாவட்டம் மற்றும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 109 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு மாணவர்கள் 11,345 பேரும், மாணவியர்கள் 11,171 பேர் என மொத்தம் 22,516 பேர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 1 தோல்வியுற்ற மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் 3 முதல் 27 வரை நடக்கிறது. இத்தேர்வில், மாவட்டத்தில் மொத்தம் 559 மாணவ, மாணவிகள், 93 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் மொத்தம் 2,995 பேர் தேர்வுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தேர்வில், மாற்றுத்திறன் மாணவர்கள் 320 பேர் தேர்வெழுதுகின்றனர். 135 நிலையான பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் எனது தலைமையில் 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காப்பி அடிக்கும் மாணவர்கள், அவர்களுக்கு உதவியாக இருப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பும், தேர்வு நாட்களில் தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வில் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 658 பேர் 129 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

