பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி கவலை
பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி கவலை
UPDATED : டிச 21, 2025 12:49 PM
ADDED : டிச 21, 2025 12:51 PM

புதுடில்லி:
''பாரம்பரிய மருத்துவம், அதற்கு தகுதியான அங்கீகாரத்தை பெறவில்லை,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியின் பாரத மண்டபத்தில் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் 2வது மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், டில்லியில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய அலுவலகத்தையும் அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோமுடன் இணைந்து திறந்து வைத்தார்.
இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:
பாரம்பரிய மருத்துவத் துறையில் உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் இங்கு அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தி உள்ளனர். இதற்காக இந்தியா ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்பதில் மகிழ்ச்சி. மேலும் உலக சுகாதார அமைப்பும் இதில் ஒரு முக்கியப் பங்காற்றி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகளாவிய மையம் இந்தியாவின் ஜாம்நகரில் நிறுவப்பட்டு இருப்பது நமக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இந்தியாவிற்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும். முதல் பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாட்டில் இந்த பொறுப்பை உலகம் மிகுந்த நம்பிக்கையுடன் நம்மிடம் ஒப்படைத்தது.
உலகளாவிய கண்ணோட்டத்தில் இந்த உச்சி மாநாட்டின் வெற்றி மிகவும் முக்கியமானது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் யோகாவும் அடங்கும். யோகா முழு உலகிற்கு ஆரோக்கியம் சமநிலை மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையை காட்டியுள்ளது. இந்தியாவின் முயற்சிகள் மற்றும் 175க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ன் சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது. யோகாவை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒவ்வொரு தனி நபருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
பாரம்பரிய மருத்துவம் இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கிறது. உலகின் மக்கள் தொகையில் ஒரு பகுதி இதனை சார்ந்துள்ளது. இருப்பினும் பாரம்பரிய மருத்துவத்துக்கு அந்தத் தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே அந்தத் திசையில் நாம் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகள்,இந்த திசையில் முன்னோக்கிச் செல்ல உலகம் தயாராக இருப்பதைக் காட்டியுள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

