சென்ட்ரலில் மாணவர்கள் ரகளை எச்சரித்து அனுப்பிய போலீசார்
சென்ட்ரலில் மாணவர்கள் ரகளை எச்சரித்து அனுப்பிய போலீசார்
UPDATED : ஆக 27, 2024 12:00 AM
ADDED : ஆக 27, 2024 09:39 AM
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இதில் பயணிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மின்சார ரயில்களின் படியில் தொங்கியபடியும், ரயில் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டும் சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில தடங்களில், மாணவர்களுக்கு ஈடாக மாணவியரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, அரக்கோணத்தில் இருந்து காலை 9:30 மணிக்கு ரயில் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணியரில், 30க்கும் மேற்பட்டோர் கல்லுாரி மாணவர்கள். அவர்கள் நிலையத்தில் பலத்த சத்தம் எழுப்பிய படி ரகளையில் ஈடுபட்டனர். மேலும், பச்சையப்பன் கல்லுாரிக்கு ஜேய்... என கோஷங்களை எழுப்பினர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார், மாணவர்களை தடுத்து நிறுத்தினர். ரயில் நிலையங்களில் சத்தம் போடுவது, பயணியருக்கு இடையூறு ஏற்படுத்துவது ரயில்வே விதிப்படி தவறு என, அறிவுரை கூறினர்.
அதேநேரம், வன்முறையில் ஈடுபட்டால், கைது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து அனுப்பினர்.
கல்லுாரி மாணவர்
கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும், இரு வேறு கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன், ஓடும் ரயிலில் கல்லுாரி மாணவர் ஒருவர், சக மாணவர்கள் மூவரால் வெட்டப்பட்டார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், சென்னை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயிலில், சந்தேகத்தின்படி, 17 வயது கல்லுாரி மாணவர் ஒருவரை சோதனையிட்டனர். அவரிடம் பட்டாக்கத்தி இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். நேற்று திருவள்ளூரில் உள்ள இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு எச்சரிக்கை விடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

