ஆக.10 முதல் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு 988 பள்ளிகளில் மும்முரம்
ஆக.10 முதல் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு 988 பள்ளிகளில் மும்முரம்
UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:55 AM

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 988 அரசு பள்ளிகளின் மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்ய ஆக.10 முதல் தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் செயல்படுகின்றன. பெற்றோர், தலைமையாசிரியரை கொண்டு செயல்படும் இக்குழுக்கள் பலவீனமாக காணப்படுகிறது. இக்குழுக்கள் மூலம் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள், வளர்ச்சி பணிகள் செய்வதில் தொடர்ந்து தொய்வு நீடிக்கிறது. மேலும் பெற்றோர் படிப்பறிவு இல்லாதவராக இருந்தால் விவாதங்களில் சுணக்கம் தான் ஏற்படுகிறது.
இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.அதன் படி மொத்தம் ஒரு பள்ளிக்கு 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தலைவர் பொறுப்பில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
துணை தலைவர் பொறுப்பில் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவரின் பெற்றோர், மாணவர்களின் பெற்றோர்களாக உள்ள துாய்மை பணியாளர்கள், எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சார்ந்த குழந்தைகளின் பெற்றோர், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு முன்னுரிமை.
பள்ளி தரப்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பிரதிநிதி, உள்ளாட்சி தரப்பில் அதன் இரு பிரதிநிதிகள், கல்வியாளராக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர், ஓய்வு ஆசிரியர் என இருவரில் யாரேனும் ஒருவர். பெற்றோர் உறுப்பினர்களாக 13 பேர், சுய உதவிக்குழு உறுப்பினர்களாக ஒருவர், முன்னாள்மாணவர்கள் 4 என மொத்தம் 24 உறுப்பினர்களை கொண்டு புதிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளன.
இந்த உறுப்பினர்களில் பெண்களுக்கு 50 சதவீதமும், பெற்றோருக்கு 75 சதவீதமும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 988 பள்ளிகளில் மறுகட்டமைப்பு நடக்கிறது. முதற்கட்டமாக 321 துவக்கப்பள்ளிகளில் ஆக. 10ல் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.
மீதமுள்ள 321 துவக்கப்பள்ளிகளில் 2ம் கட்டமாக ஆக. 17, உயர்நிலை, மேல்நிலையில் 190 பள்ளிகளில் ஆக.24ம், நடுநிலைப்பள்ளிகளில் 156க்கு ஆக. 31லும் மறுகட்டமைப்பு நடக்கிறது. இதில் தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.