UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 10:04 PM

திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தொலைநெறி கல்வி திட்டத்தில் இந்த ஆண்டு 6 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படுவதாக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார்.
இப்பல்கலையின் கல்வி சார் நிலைக்குழு கூட்டம் நேற்று துணைவேந்தர் தலைமையில் நடந்தது. பதிவாளர் சாக்ரடீஸ் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். துணைவேந்தர் கூறுகையில், கல்லூரிகளில் எம்.பில்., பாடப் பிரிவில் மாணவர்களை சேர்க்கக்கூடாது என பல்கலை மானிய குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சேர்ந்தவர்களை தவிர புதிதாக எம்.பில் பாடங்களில் மாணவர்கள் சேர்க்க அனுமதி இல்லை. தொலைநெறி கல்வி திட்டத்தில் இந்த ஆண்டு முதல் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு , பொருளாதாரம், வணிகவியல், இதழியல் ஆகிய 6 புதிய முதுகலை பாடப்பிரிவுகள் துவக்கப்படுகின்றன. ஏற்கனவே 24 பாடப்பிரிவுகள் உள்ளன. புதிய பாடப்பிரிவுகளில் பல்கலைக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே பயில முடியும் என்றார்.