மாற்றுத்திறன் மாணவர்களுக்கு திறன்மேம்பாடு; மாநிலத்தின் முதல் வகையான பயிற்சி வகுப்பு, கலெக்டர் பெருமிதம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு திறன்மேம்பாடு; மாநிலத்தின் முதல் வகையான பயிற்சி வகுப்பு, கலெக்டர் பெருமிதம்
UPDATED : ஜன 21, 2026 04:47 PM
ADDED : ஜன 21, 2026 04:48 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில், மாற்றுத் திறன் மாணவர்களுக்கான அறிவுசார் குறைபாடு தொழிற்கல்வி மதிப்பீடு மற்றும் திறன் பயிற்சி முகாம் துவங்கியது.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்த பயிற்சி முகாமை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், அறிவுசார் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான தேவைகள், மதிப்பீட்டை நடத்துவதற்காக சிறப்பு கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநிலத்தின் முதல் வகையான பயிற்சி வகுப்பு, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று துவங்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் பயிற்சி திட்டத்திற்கான சூழலை ஆட்டிசம் உள்ளவர்களுக்கான சிறப்பு மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பிளஸ் 2 முடித்த மற்றும் உயர் கல்வியில் சேராத அறிவுசார் குறைபாடுகள் உள்ள மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
மதிப்பீடு
மாணவர்களின் திறன்களை மதிப்பிட்டு, குழந்தையின் ஆர்வத்திற்கு ஏற்ப பல்வேறு தொழில் திட்டங்களில் மாணவர்களை திறன்படுத்தும், திறன் கூட்டாளர்களுடன் அவர்களை இணைத்து செயல்படும் திட்டமாக அமைந்துள்ளது.
அதேபோல் பள்ளிக் கல்வித் துறை மூலம் சிறப்பு கல்வியாளர்களுக்கு, தொழில் மதிப்பீடு மற்றும் நிரலாக்க முறையை பயன்படுத்தி, தேவைகள் மதிப்பீட்டை நடத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதற்காக, சிருஷ்டி கிராம அறக்கட்டளை நிறுவனர் கார்த்திகேயன் கணேசன், இந்த பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், சிறப்பு கல்வியாளர்கள் குழந்தை மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை மூலம் மதிப்பீட்டை நடத்த இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர், மாவட்ட கல்வி அலுவலர் சேகர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பயிற்சி) இளவரசி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சிவநடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

