15 வினாடிகளில் 38 மாவட்டங்களின் பெயர்களை கூறிய மாணவர்
15 வினாடிகளில் 38 மாவட்டங்களின் பெயர்களை கூறிய மாணவர்
UPDATED : பிப் 11, 2026 02:15 PM
ADDED : பிப் 11, 2026 02:17 PM

கூடலுார்:
கூடலுாரை சேர்ந்த பள்ளி மாணவர் மாநிலத்தில் உள்ள, 38 மாவட்டங்களின் பெயர்களை, 15 வினாடிகளில் கூறி, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
கூடலுார் மரப்பாலம் அட்டிக்கொல்லி பகுதியை சேர்ந்த விஜய்நித்யா தம்பதியின் மகன் சுதன். இவர் ஜி.டி.எம்.ஒ., மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஊர்களின் பெயரை விரைவாக கூறும் தனித்திறன படைத்தவர். இதனை அறிந்த பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களின் பெயர்களை விரைவாக கூறுவது கூறித்து பயிற்சி அளித்தார்.
தொடர்ந்து, 38 மாவட்டங்களின் பெயர்களை, 15 வினாடிகளில் கூறி சாதித்தார். மாணவரின் சாதனை சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கினர். மாணவரின் சாதனையை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
பயிற்சியாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், “ஏற்கனவே, கேரளாவில் இது போன்ற திறமையான மாணவர்களை கண்டுபிடித்து பயிற்சி அளித்து வருகிறோம். இதில், 25 மாணவர்கள் செய்த சாதனை, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்,” என்றார்.

