பி.யு., தேர்வு மைய முகவரியை மாற்றிய ஆணையம் பதற்றத்தில் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள்
பி.யு., தேர்வு மைய முகவரியை மாற்றிய ஆணையம் பதற்றத்தில் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள்
UPDATED : மார் 01, 2026 12:50 PM
ADDED : மார் 01, 2026 12:51 PM

பெங்களூரு:
கர்நாடகா முழுதும் நேற்று பி.யு., கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்கின. 7.10 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதுகின்றனர். யாத்கிரில் பி.யு., ஆணையத்தின் குளறுபடியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் நேற்று பி.யு., கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்கின. 1,217 தேர்வு மையங்களில், 7.10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். முதல் நாளான நேற்று கன்னடம், அரபிக் பாடத்தேர்வுகள் நடந்தன. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தேர்வு அறைகளில் முறைகேடுகள் நடக்காத வகையில், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
யாத்கிரில் பி.யு., ஆணையம் அளித்த ஹால் டிக்கெட்டில், நகரின் குஞ்ச் ரோட்டில் உள்ள சாபா பி.யு., கல்லுாரி என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அங்கு சென்ற மாணவர்கள், பெற்றோர், அக்கல்லுாரி அங்கு இல்லை என்பதை அறிந்த அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்வு நேரம் துவங்கியதை அறிந்த மாணவர்கள் சிலர் அழத் துவங்கினர். அருகில் இருந்த கடைகளில் விசாரித்த போது, லும்பினி பூங்கா அருகேயுள்ளது சாபா பி.யு., கல்லுாரி என்று தெரிவித்தனர். தேர்வுக்கு சில நிமிடங்களே இருந்த போது, வேறு வழியின்றி அங்கு ஓடினர். அங்கு சென்ற அவர்கள், பி.யு., ஆணையத்தின் தவறை சுட்டிக்காட்டி, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'ஆண்டு முழுதும் கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகள், தேர்வு எழுத தயாராக இருந்தனர். ஆனால், பி.யு., ஆணையத்தின் தவறால், எங்கள் பிள்ளைகள் பதற்றத்துடன் தேர்வு மையத்துக்கு சென்றுள்ளனர். இந்த பதற்றத்தில் அவர்களால் எப்படி தேர்வு எழுத முடியும். ஹால் டிக்கெட் வினியோகிக்கும் முன், தேர்வு மையத்தின் முகவரி சரியாக உள்ளதா, இல்லையா என்பதை பார்க்கமாட்டார்களா' என கேள்வி எழுப்பினர்.
மற்றபடி மாநிலத்தில் தேர்வுகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சமூகமாக நடந்தன.

