UPDATED : ஜூலை 24, 2024 12:00 AM
ADDED : ஜூலை 24, 2024 09:50 AM

பொள்ளாச்சி:
அரசு பள்ளிகளில், அரசின் ஆதார் மையப் பணியாளர்கள், மாணவர்களின் கைரேகையை அப்டேட் செய்யும் பணி திடீரென நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கென, அவர்களுக்கு உதவி மற்றும் ஊக்கத் தொகைகள், வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இதனல், மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. புதிய வங்கிக் கணக்கு துவக்க, ஆதார் எண் அவசியமாவதால், அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் திருத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், அரசின் ஆதார் மையப் பணியாளர்கள் உதவியுடன் மாணவர்களின் கைரேகை அப்டேட் செய்யப்படுகிறது. இதற்கான பணி, சில நாட்கள் மட்டுமே நடந்தது. சில பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே கைரேகை அப்டேட் செய்யப்பட்ட நிலையில், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு இதற்கான பணி மேற்கொள்ளப்படவில்லை.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
குழந்தைகள் வளரும் போது, கைரேகையில் மாற்றம் ஏற்படும். இதனால், வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்த முற்பட்டால் 'எமிஸ்' தளத்தில் அவர்களின் கைவிரல் ரேகை பொருந்தாது.
எனவே, அவர்களின் கைரேகையைப் புதுப்பித்து, வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் சீடிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி, மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி, ஆதார் மையப் பணியாளர்களால் பள்ளிகள் தோறும் மேற்கொண்டு வந்தனர்.
தற்போது, பணியாளர்கள் வருகை இல்லாததால், பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை, தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகம், தபால் அலுவலகத்தில் உள்ள ஆதார் இ-சேவை மையத்துக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.

