உலோகத்தகடு எழுத்துக்களில் திருவள்ளுவர் சிலை வசீகரம்
உலோகத்தகடு எழுத்துக்களில் திருவள்ளுவர் சிலை வசீகரம்
UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 11:07 AM

மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகம் இயங்குகிறது.
இந்நிறுவன தயாரிப்புகளை, ஆர்வலர்கள் விரும்பி வாங்குகின்றனர். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, சுற்றுலா பயணியரை வசீகரிக்கிறது.
உலோக தகட்டில் வெட்டி எடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை, அவர் அமர்ந்திருக்கும் தோற்றத்திற்கேற்ப ஒருங்கிணைத்து, 4 அடி உயர சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் விளிம்பு பகுதி மட்டும், பல்வேறு அளவு எழுத்துக்களாக அமைந்து, உட்புறம் கூடாக உள்ளது.
இது குறித்து, பூம்புகார் நிறுவனத்தினர் கூறியதாவது:
இச்சிலையை, கோயம்புத்துாரைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இங்கு நடக்கவிருந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த, இச்சிலை வரவழைக்கப்பட்டது. இச்சிலை பூம்புகார் நிறுவனத்தைச் சேர்ந்தது அல்ல; மீண்டும் கோயம்புத்துாருக்கே அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

