UPDATED : பிப் 07, 2026 10:12 AM
ADDED : பிப் 07, 2026 10:13 AM

பாலக்காடு:
கஞ்சிக்கோடு அருகே உள்ள ஐ.ஐ.டி.,யில் மூன்று நாட்களாக நடைபெற்ற மாணவர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில், கேரளா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, 22 கல்வி நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வணிக மாதிரிகளை உருவாக்குதல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதி திரட்டும் முறைகள், நிறுவனப் பதிவு நடைமுறைகள் மற்றும் முன் மாதிரி தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், 'டிசைன் திங்கிங்' எனப்படும் வடிவமைப்புக் கோட்பாடுகள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முறைகள் கற்பிக்கப்பட்டன.
மாணவர்கள் ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிசோதனை மையங்களை பார்வையிட்டனர். ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடன் கலந்துரையாடி, எவ்வாறு வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது என்பது குறித்த அனுபவ அறிவை பெற்றனர்.
நிகழ்ச்சியை, பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் சேஷாத்ரி சேகர் துவக்கி வைத்தார். 'ஜயோன் இம்ப்ளான்ட்ஸ்' நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர், ஐ.ஐ.டி., டீன் அரவிந்த் அஜோய், இணை டீன் டாக்டர் விவேக் சதுர்வேதி, 'டெக்' முதன்மைச் செயல் அலுவலர் மிது உண்ணித்தான் உள்ளிட்டோர் பேசினர்.

