மாநிலப் போட்டிக்கு வடக்கலூர் அரசு பள்ளி மாணவி தேர்வு
மாநிலப் போட்டிக்கு வடக்கலூர் அரசு பள்ளி மாணவி தேர்வு
UPDATED : நவ 05, 2025 07:47 AM
ADDED : நவ 05, 2025 07:48 AM
அன்னூர்:
வடக்கலூர் அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த மாதம் அன்னூர் ஒன்றிய அளவில் கலைத்திருவிழா நடந்தது. இதில் வடக்கலூர் அரசு நடுநிலைப்பள்ளி வட்டார அளவில் இளநிலைப் பிரிவில் இரண்டு முதல் பரிசுகளும், ஆறு முதல் எட்டு வரையான பிரிவில், ஆறு முதல் பரிசுகளும், இரண்டு இரண்டாம் பரிசுகளும் பெற்றது.
கோவையில் நடந்த மாவட்ட கலைத் திருவிழாவில் இப்பள்ளி பங்கேற்றது. இதில் பல குரல் பேச்சு போட்டியில் இப்பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி சத்யா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஏழாம் வகுப்பு மாணவர் ஹரி பிரகாஷ் பாவனை நடிப்பில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
இப்பள்ளி மாணவியர் சவுமியா, ஹர்ஷிதா, சுவாதி, சுருதி, அஸ்மிதா, வினுகா ஸ்ரீ, தீபக்குமார், லோகிதன், நித்திஷ் ஆகியோர் குழு நடனத்தில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி ஆஷா மாறுவேட போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். மேலும் நாகமாபுதூர் துவக்கப்பள்ளி மாணவி ரிஷிகா களிமண் பொம்மை செய்யும் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். சாதித்த மாணவ மாணவியருக்கு, கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

