மண் வளத்துக்கு மண்புழு உரம்; வேளாண் மாணவியர் விளக்கம்
மண் வளத்துக்கு மண்புழு உரம்; வேளாண் மாணவியர் விளக்கம்
UPDATED : ஜன 10, 2026 12:55 PM
ADDED : ஜன 10, 2026 02:13 PM

ஆனைமலை: ஆழியாறு பகுதியில், மண் வளம் மேம்பாட்டில் மண்புழு உரம் குறித்து விவசாயிகளிடம் வேளாண் மாணவியர் விளக்கமளித்தனர். தமிழ்நாடு வேளாண் பல்கலை 4ம் ஆண்டு பயிலும் மாணவியர், ஆழியாறு பகுதியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில், மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து மாணவியர் விவசாயிகளுக்கு தெரிவித்தனர். மண்புழு உரம், திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாய கழிவு பொருட்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உட்கொண்டு எச்சங்களை சிறு, சிறு, உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவது தான் மண்புழு உரம் என விளக்கப்பட்டது. இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவை இருக்கிறது. 45 - 60 நாட்களில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும். மண்ணின் வளத்தை அதிகரித்து அதன் அமைப்பை மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, நீர் தேக்கி வைக்கும் திறனை அதிகரிக்கிறது; நுண்ணுயிர்களை சேர்க்கிறது என, விளக்கமளித்தனர்.

