ஜாபர் சாதிக் பணமும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகமும்! பகீர் புகார் கிளப்பிய அண்ணாமலை
ஜாபர் சாதிக் பணமும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகமும்! பகீர் புகார் கிளப்பிய அண்ணாமலை
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:52 PM
சென்னை:
ஜாபர் சாதிக், பணத்தை, வெள்ளையாக்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், தி.மு.க., நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜாபர் சாதிக்கின் நிறுவனமான கோலசன்ஸ் வென்சர்ஸ் என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான ஸ்ரீ அப்பு டைரக்ட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 - 2023 காலகட்டத்தில், தனது கோலசன்ஸ் வென்சர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், ஸ்ரீ அப்பு டைரக்ட் நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாபர் சாதிக்கின் கோலசன்ஸ் வென்சர்ஸ் நிறுவனம் ஆகும்.
குறிப்பிட்ட காலகட்டத்தில், தி.மு.க., நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.