10 நிமிடத்தில் டெலிவரி திட்டம் ரத்து: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றது 'பிளிங்கிட்'
10 நிமிடத்தில் டெலிவரி திட்டம் ரத்து: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றது 'பிளிங்கிட்'
ADDED : ஜன 13, 2026 08:45 PM

புதுடில்லி: மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளிங்கிட் நிறுவனம் ,'' 10 நிமிடத்தில் விநியோகம்'' என்ற விளம்பர முறையை நீக்க முடிவு செய்துள்ளது.
ஆன்லைனில் விநியோக நிறுவனமான பிளிங்கிட், '' 10 நிமிடத்தில் டெலிவரி சேவை'' என விளம்பரம் செய்துவந்தது. குறுகிய நேர விநியோக விளம்பரங்களால், கடுமையான பணி அழுத்தம் ஏற்படுவதாக தொழிலாளர் அமைப்புகள் தெரிவித்தன. டெலிவரி செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன. இதற்கு எதிராக வேலைநிறுத்த போராட்டமும் நடந்தது.
இதனையடுத்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமீபத்தில் பிளிங்கிட், செப்டோ மற்றும் சுவிக்கி, சொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மிகக்குறுகிய காலத்திற்குள் பொருட்களை விநியோகம் செய்யே வேண்டும் என்ற கட்டாயத்தால் ஊழியர்களின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறுகிறது என கவலை தெரிவித்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் என்ற விளம்பரங்களை நீக்க வேண்டும் எனக்கூறினார்.
இதனை ஏற்றுக்கொள்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் உறுதி அளித்தன. பிளிங்கிட் நிறுவனமும் 10 நிமிடத்தில் டெலிவரி என்ற விளம்பரத்தை நீக்க துவங்கி உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

