அரட்டை செயலியில் ஒரே நாளில் 20 லட்சம் புதிய பயனர்கள்
அரட்டை செயலியில் ஒரே நாளில் 20 லட்சம் புதிய பயனர்கள்
ADDED : அக் 01, 2025 06:44 PM

சென்னை: '' சுதேசி சமூக வலைதளமான 'அரட்டை' மொபைல் செயலியை நேற்று( செப்., 30) ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் பயனர்கள் இணைந்துள்ளனர் ,'' அதனை உருவாக்கிய ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அநியாய வரி விதித்தார். இதனையடுத்து அந்நாட்டை சேர்ந்த சமூக வலைதளங்களுக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து ஸோகோ நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்திய அரட்டை மொபைல் செயலி மீது இந்திய மக்களின் கவனம் திரும்பியது. முதலில் தினமும் சராசரியாக சில ஆயிரம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் சென்றுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரட்டை செயலியில் சில மேம்பாடுகளை செய்துள்ளோம். தயவு செய்து அதனை ப்ளேஸ்டோர் மூலம் அப்டேட் செய்யவும். உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளோம். நேற்று ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர். உங்களின் அன்புக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுதேசி சமூக வலைத்தளமான அரட்டை மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.