சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்கானிஸ்தான்: பெண் நிருபர்களை அழைத்து மீண்டும் கூட்டம்
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்கானிஸ்தான்: பெண் நிருபர்களை அழைத்து மீண்டும் கூட்டம்
ADDED : அக் 12, 2025 11:09 PM

புதுடில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், பெண் நிருபர்கள் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையானதால், நேற்று மீண்டும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை அவர் நடத்தினார். இதில், பெண் நிருபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் 'நேட்டோ' படைகள் வெளியேறிய நிலையில், கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதையடுத்து, காபூலில் இயங்கி வந்த துாதரகத்தை நம் நாடு மூடியது. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை நம் நாடு செய்து வருகிறது. இதனால், இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான துாதரக உறவு வலுவடைந்தது.
இந்நிலையில், ஆறு நாள் பயணமாக நம் நாட்டிற்கு வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த கூட்டத்தின்போது பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
ஆப்கானிஸ்தானை போல, இங்கும் பாலின பா குபாட்டை செயல்படுத்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி முயற்சிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.
எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
ஆப்கன் துாதரகம் வாயிலாகவே பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என, மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பெண் நிருபர்களை அழைத்து அமீர்கான் முத்தகி நேற்று மீண்டும் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தின்போது பெண் நிருபர்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறித்து அமீர்கான் முத்தகி விளக்கம் அளித்தார்.
தொழில்நுட்ப தவறு!
டில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் துாதரகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு, பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படாததில் சிறிய தொழில்நுட்பத் தவறு நடந்து விட்டது. குறைந்த அவகாசத்துக்குள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. திட்டமிட்டு, பெண் பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்படவில்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆப்கனில், 28 லட்சம் பெண்கள் கல்வி நிலையங்களுக்கு செல்கின்றனர். பெண்கள் கல்வி கற்பதற்கு மத ரீதியாக எந்த தடையும் விதிக்கப்படவில்லை. - அமீர்கான் முத்தகி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்