போர் விஷயத்தில் யதார்த்தமாக இருங்கள், தேர்தல் நடத்துவது எப்போது? ஜெலன்ஸ்கியை சாடிய அதிபர் டிரம்ப்
போர் விஷயத்தில் யதார்த்தமாக இருங்கள், தேர்தல் நடத்துவது எப்போது? ஜெலன்ஸ்கியை சாடிய அதிபர் டிரம்ப்
ADDED : டிச 11, 2025 08:46 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தலை தடுத்து நிறுத்துவதற்காக போரைப் பயன்படுத்துகிறார் என்று மீண்டும் மீண்டும் கூறியதைத் தொடர்ந்து, ''உக்ரைன் தேர்தல்களுக்குத் தயாராக உள்ளது' என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளை நெருங்குகிறது. இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இரு நாடுகளுக்கிடையே அமைதி பேச்சுக்களை விரைவுபடுத்தி வருகிறது. ரஷ்யா உக்ரைனிடம் கைப்பற்றிய பிரதேசங்களை விட்டு தர மறுக்கிறது; இதை உக்ரைன் ஏற்க மறுக்கிறது. இதனால் இன்னமும் மோதல் நீடிக்கிறது.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2019லேயே காலாவதியானது. ஆனால் ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் போர் சட்டம் அமலில் உள்ளது; எனவே தேர்தல் தடைபட்டுள்ளது. தற்போது, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் அமைதி திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீதான விமர்சனத்தை தீவிரப்படுத்தினார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் குறித்து யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக் கிறேன். அவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும். அவர்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அது இனி ஜனநாயகம் இல்லாத ஒரு கட்டத்திற்குச் செல்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இதற்கு, பதில் அளித்து ஜெலென்ஸ்கி கூறியதாவது: அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவியுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், அடுத்த 60 முதல் 90 நாட்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படலாம். நான் இப்போது கேட்கிறேன், இதை வெளிப்படையாகக் கூறுகிறேன்.
தேர்தல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அமெரிக்கா எனக்கு உதவ வேண்டும். உக்ரைனில் தேர்தல் பிரச்னை, முதலில் நமது மக்களைச் சார்ந்தது என்று நான் நம்புகிறேன், இது உக்ரைன் மக்களுக்கான கேள்வி, மற்ற நாடுகளின் மக்கள் அல்ல. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்

