அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்: தமிழகத்திற்கு கர்நாடகா ஆதரவு
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்: தமிழகத்திற்கு கர்நாடகா ஆதரவு
ADDED : மார் 04, 2026 03:15 AM

பெங்களூரு: 'மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்' என, தமிழக அரசு எடுக்கும் முயற்சியை பாராட்டுவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய, உயர்நிலை குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு அளித்த அறிக்கையின் பகுதி -1ஐ, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம், 20ம் தேதி அனுப்பி வைத்தார். அறிக்கையில் உள்ளபடி, 'அரசியலமைப்பு திருத்தம்' தொடர்பான விஷயத்தை முன்வைத்து கடிதமும் எழுதி இருந்தார்.
இந்த கடிதத்திற்கு சித்தராமையா எழுதி உள்ள பதில் கடிதம்: கூட்டாட்சி என்பது அரசியல் கோரிக்கை அல்ல; அது, நம் அரசியலமைப்பு அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி. பல ஆண்டுகளாக நிதி மற்றும் சட்டசபை தொடர்பான விஷயங்களில் அதிகரித்து வரும் பிரச்னை, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கற்பனை செய்த சமநிலையை சீர்குலைத்து உள்ளது.
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்து வதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட, கர்நாடகா தயாராக உள்ளது. மாநில சுயாட்சிக்காக, 'அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்' என்று, தமிழக அரசு எடுக்கும் முயற்சியை பாராட்டுகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

