கோவில் பாதுகாப்பில் அலட்சியம்; ஹிந்து முன்னணி கண்டனம்
கோவில் பாதுகாப்பில் அலட்சியம்; ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : ஜன 05, 2026 10:15 PM

திருப்பூர்: கோவிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பை தமிழக அரசு அலட்சியம் செய்வதாக ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: சிதம்பரம் கோவிலில் அத்துமீறி நுழைந்த நபர், அநாகரிகமான செயல்பட்டுள்ளார். இவ்வாறான அநாகரீகம் முதல் முறை அல்ல; அந்த வகையில் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து, அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள் மற்றும் கோவில் விக்ரகங்களை சேதபடுத்துபவர்கள் மீது புகாரளித்தால், போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என, காரணத்தை சொல்லி வழக்கை முடிப்பது அரசு மற்றும் காவல்துறையின் திட்டமிட்ட அலட்சியம் என்றே கருத வேண்டியுள்ளது.
கடந்த, நான்கு ஆண்டுகளில் இதுபோன்ற அத்துமீறிய அநாகரிக செயல் கோவில் சுவாமி திருமேனிகள் உடைப்பு சம்பவங்கள், நுாற்றுக்கணக்கில் நடந்துள்ளது. உதாரணமாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நள்ளிரவில் நுழைந்து, சுவாமி திருமேனிகளை சேதப்படுத்தியதில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என, வழக்கை போலீசார் முடித்து வைத்துவிட்டது. இவ்வாறான காவல்துறையின் அலட்சியம் அரிதானது அல்ல. வழக்கமானது என்பதையே சமீபத்திய சிதம்பரம் கோவில் சம்பவம் எடுத்து காட்டுகிறது.
போலீசாரின் அலட்சிய போக்கினால், சமூக விரோதிகளுக்கு கோவில்களில் உண்டியல் திருட்டு முதல் எல்லா வகையான குற்ற செயல்களிலும், ஈடுபடும் தைரியம் தருவதாக அமைகிறது என்றால் மிகையில்லை. அதேநேரம், வேற்று மதத்தினர் வழிபாட்டு இடம் என்றால், உள்ளபடியே மனநலம் பாதித்தவர் என்றாலும், அதை மறைத்து கூட, காவல்துறை வழக்கு பதிந்து கடும் நடவடிக்கையை எடுக்கிறது என்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள் என்பதை, அரசும், காவல்துறையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கோவிலில் நடக்கும் அத்துமீறல்கள் பக்தர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. கோவிலின் புனிதத்தை பாதுகாக்கவும், அத்துமீறி நடப்பவர்களை, கோவிலில் விக்கிரகங்களை சிதைப்பவர்களை, அரசியல் செல்வாக்கு மமதையில் செயல்படுபவர்களை தமிழக அரசும், போலீசாரும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க செய்ய வேண்டும். இவ்வாறு, கூறியுள்ளார்.

