வங்கதேசத்துக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது: நாடு திரும்பிய முன்னாள் பிரதமர் மகன் பேச்சு
வங்கதேசத்துக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது: நாடு திரும்பிய முன்னாள் பிரதமர் மகன் பேச்சு
UPDATED : டிச 26, 2025 02:58 AM
ADDED : டிச 26, 2025 02:31 AM

டாக்கா: “வங்கதேசத்துக்கு இரண்டு முறை விடுதலை கிடைத்துள்ளது. கடந்த 1971ல் கிடைத்தது ஒரு விடுதலை; 2024ல் மாணவர்கள் எழுச்சியால் இரண்டாவது முறை விடுதலை கிடைத்துள்ளது,” என, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத கட்சி செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் புரட்சியால், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதன் தொடர்ச்சியாக, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
வரவேற்பு
அடுத்தாண்டு, பிப்ரவரி 12ம் தேதி அந்நாட்டில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் முக்கிய கட்சியாக பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவரான, முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 80, உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, அக்கட்சியின் செயல் தலைவரும், கலிதா ஜியாவின் மூத்த மகனுமான தாரிக் ரஹ்மான், 60, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து, 17 ஆண்டுக்குப் பின், நேற்று தாயகம் திரும்பினார். முந்தைய அரசில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், நாட்டை விட்டு அவர் வெளியேறினார். இடைக்கால அரசு அந்த வழக்குகளை ரத்து செய்துள்ளது.
இதையடுத்து தன் தாயை பார்க்கவும், தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும், தாரிக் ரஹ்மான், தன் மனைவி ஜூபைதா, மகள் ஜைமா உள்ளிட்டோருடன் நேற்று வங்கதேசம் திரும்பினார்.
தாரிக் ரஹ்மானை வரவேற்க, அவருடைய கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து, புர்பாச்சல் என்ற பகுதியில் உள்ள 'ஜூலை 36 எக்ஸ்பிரஸ்வே' என்ற இடத்துக்குச் சென்ற ரஹ்மான், அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:
வங்கதேசத்துக்கு, 1971ல் விடுதலை கிடைத்தது; இப்போது 2024ல் மீண்டும் ஒருமுறை விடுதலை கிடைத்துள்ளது. வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது; மக்களின் ஓட்டுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படும் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும்.
தொலைநோக்கு பார்வை
அனைத்து சமூகங்கள் மற்றும் இனக்குழுக்களின் பங்கேற்புடன் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்தை உருவாக்க வேண்டும்.
அமெரிக்க சமூக உரிமை ஆர்வலரான மார்டின் லுாதர் கிங், ' எனக்கு ஒரு கனவு உள்ளது' என்றார். அதுபோல், ஒரு சிறந்த வங்கதேசத்தை உருவாக்க ' என்னிடம் ஒரு திட்டம்' உள்ளது. நாட்டில் அமைதி, ஒழுக்கம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர பி.என்.பி., கட்சி அயராது பாடுபடும். இவ்வாறு பேசினார்.
தன் அரசியல் எதிரியான ஷேக் ஹசீனாவிடம் இருந்து நாடு விடுதலை பெற்றிருப்பதையே, 2024ல் இரண்டாவது விடுதலை கிடைத்திருப்பதாக தாரிக் ரஹ்மான் குறிப்பிடுகிறார்.
தன் ஆதரவாளர்களிடையே பேசிய பின், பலத்த பாதுகாப்புடன் எவர்கேர் மருத்துவமனைக்கு சென்றார் தாரிக் ரஹ்மான். அங்கு சிகிச்சை பெற்று வரும் தன் தாய் கலிதா ஜியாவை அவர் பார்த்தார். சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார் .
முன்னதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்து பேசினார் தாரிக் ரஹ்மான்.

