முஸ்லிம்கள் முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது: கேரள உயர் நீதிமன்றம்
முஸ்லிம்கள் முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது: கேரள உயர் நீதிமன்றம்
ADDED : நவ 06, 2025 03:32 AM

திருவனந்தபுரம்: 'முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய முடியாது' என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் கண்ணுார் அரு கே உள்ள கருமத்துார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப், 44. இவர் கடந்த, 2017-ல் காசர்கோடை சேர்ந்த ஆபிதா, 38, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
ஆனால் ஷெரீப் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. இதனால் ஷெரீப்பின் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய திருக்கரிப்பூர் பஞ்சாயத்து செயலர் மறுத்தார்.
இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் ஷெரீப் மனு தாக்கல் செய்தார். முஸ்லிம் மத சட்டத்தின்படி இரண்டாவது திருமணம் செய்ய உரிமை உண்டு என்பதால், தன் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிடக் கோரினார். இதை விசாரித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் அளித்த தீர்ப்பின் விபரம்:
அரசியலமைப்பு சட்டத்தில் இருபாலருக்கும் சம உரிமை உள்ளது. ஆண்களுக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் கிடையாது. தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய, 99.99 சதவீதம் பெண்களும் விரும்ப மாட்டார்கள்.
திருமணத்தை பதிவு செய்யும் விண்ணப்பத்தில் வேறு மனைவியர் இருந்தால் அவர்களது விபரங்களை குறிப்பிட வேண்டும். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு திருமணத்தை செய்யலாம்.
ஆனால் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமென்றால் முதல் மனைவியின் சம்மதம் கண்டிப்பாக தேவை. இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் சம்மதம் தேவையில்லை என குர்ஆனில் கூட கூறவில்லை.
மனுதாரர் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வதற்கு மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகலாம்.
முதல் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது கருத்தை கேட்ட பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

