இனி தேர்தலில் போட்டியில்லை: சித்தராமையா அறிவிப்பு
இனி தேர்தலில் போட்டியில்லை: சித்தராமையா அறிவிப்பு
ADDED : ஜூலை 27, 2026 02:17 AM

மாண்டியா: கர்நாடக காங்., மூத்த தலைவர் சித்தராமையா, 77, ''இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்,'' என, அறிவித்துள்ளார்.
கர்நாடக காங்., அரசில் மூன்றாண்டுகளாக முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, இரண்டு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்றார்.
வருத்தம்
இந்நிலையில், மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது:
சமீபத்திய அரசியல் நிலவரங்கள், என் மனதுக்கு வருத்தம் அளிக்கின்றன. சட்டசபைக்கு 2028ல் நடக்கும் தேர்தலில், நான் போட்டியிட மாட்டேன்.
இனி, எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஆனால், அரசியலில் இருப்பேன். மக்களின் கஷ்டங்களுக்கு குரல் கொடுப்பேன். இன்றைய அரசியல் அசுத்த மடைந்துள்ளது; நேர்மையானவர்கள் பிழைக்க முடியாது.
இதற்கு முன் தேர்தலில் போட்டியிட்டால், தொகுதி மக்களே எங்களுக்கு பணம் கொடுத்து, வெற்றி பெற வைப்பர். ஆனால், இன்று தேர்தலில் போட்டியிட்டால், நாங்கள் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய காலம் வந்துள்ளது.
நெருக்கடி
நான் அடுத்த 10 ஆண்டுகள் அரசியலில் இருக்க வேண்டும் என, விசுவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். வருணா தொகுதி மக்களும் தேர்தலில் போட்டியிடும்படி, எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
அரசியலில் இருப்பேன்; ஆனாலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். வரும், 2028ல், எனக்கு 80 வயதாகியிருக்கும். அப்போது என் அரசியல் வாழ்க்கையும், 50 ஆண்டுகள் நிறைவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
