பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக் தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக் தகவல்
UPDATED : டிச 15, 2025 07:41 PM
ADDED : டிச 15, 2025 07:28 PM

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் ஜாட் பெயர் இடம்பெற்று உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது.
கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், உள்ளூர்வாசிகளான பஷீர் மற்றும் பர்வேஸ் ஜோதர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு உட்பட ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1,597 பக்க குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் ஜாட்டும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மூவரும் பைசல் ஜாட் என்கிற சுலேமான் ஷா, ஹபீப் தாஹிர் என்கிற ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த 8 மாதமாக நடத்தப்பட்ட விசாரணையில், சதித்திட்டத்தை தீட்டி, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வரும் பாகிஸ்தான் செயலைஎன்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டபர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதட் ஆகிய இருவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் விசாரணை தொடர்கிறது என குற்றப்பத்திரிகையில் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

