ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு: ராம ரவிக்குமார் பேட்டி
ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு: ராம ரவிக்குமார் பேட்டி
ADDED : டிச 04, 2025 04:38 AM

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவை அரசு அவமதித்துள்ளது'' என ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது:
ஏற்கனவே மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என நேற்று முன்தினமே நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நேற்று மாலை 6:00 மணிக்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவர் என எதிர்பார்த்தோம். அதையும் செய்யவில்லை. தீபம் ஏற்கனவே ஏற்றிய மண்டபத்தில்தான் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும், அதிகாரிகள், மனுதாரருடன் 10 பேருக்கு சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புடன் மலைக்கு செல்ல வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவில் உள்ளது. அந்த உத்தரவு நகலை கொடுத்தோம்.
ஆனால் தமிழக போலீசார், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அதைமீறி சென்றால் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களையும் கைது செய்வோம் என்றனர். இந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லையா. நீதிமன்ற உத்தரவை இந்த அரசு ஏன் மறுக்கிறது. இந்த விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அரசுக்குத்தான் பிரச்னை. ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவை அரசு அவமதித்துள்ளது.
144 தடை உத்தரவு
அமலில் இருக்கும் நிலையில், பக்தர்களை அனுமதிக்காத அரசு போலீசாரை இத்தனை எண்ணிக்கையில் ஏன் அனுமதித்துள்ளது. இது சட்டத்திற்குள் வருமா, வராதா. எங்களையும், சி.ஐ.எஸ்.எப்., வீரர்களையும் கைது செய்ய சொல்கிறார்கள் என்றால் இது முழுக்க முழுக்க தமிழக அரசின் திட்டமிட்ட செயல்தான். அரசு மேல்முறையீடுக்கு சென்றுள்ளதாக சொல்கிறார்கள். நாங்கள் சட்டத்தின்படி நடப்போம். வெற்றி பெறுவோம் என்றார்.
அடிப்படை உரிமை பறிப்பு
அவரது வழக்கறிஞர் சாமிநாதன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது அரசு, கோயில் நிர்வாகத்தின் கடமை. உத்தரவை இந்த இருதரப்புக்கும்தான் கொடுத்துள்ளனர். அவர்கள் உத்தரவை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்தான் தொடரமுடியும். இந்த தீபத்தை கார்த்திகை நாளில் மாலை 6:00 மணிக்குத்தான் ஏற்ற முடியும். இதற்கான உத்தரவை நேற்று முன்தினமே வழங்கி விட்டோம். அதற்கான எந்த வேலையிலும் கோயில் நிர்வாகம் செய்யவில்லை. இதற்காக கோயில் நிர்வாகத்தை மட்டுமே நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.
அவர்கள் நேற்று முன்தினமே மேல்முறையீடு செய்துள்ளனர். அது ஏற்கப்படவில்லை. இன்று நீதிமன்ற அவமதிப்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு வீடியோகான்பரன்சிங்கில் போலீஸ், கோயில் செயல் அலுவலரையும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது. தர்ஹாவில் இருந்து 15 மீ., க்கு அப்பால் எந்த இடத்திலும் தீபம் ஏற்றலாம் என 1996 ல் உயர்நீதிமன்றம் தெளிவான உத்தரவு வழங்கியும், சில லெட்டர் பேடு அமைப்புகளுக்காக, ஓட்டுக்காக, ஹிந்துக்களின் அடிப்படை உரிமையைக்கூட தமிழக அரசு பறிக்கும் வகையில் அரசு செயல்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
144 தடை உத்தரவு பைத்தியக்காரத்தனம் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம் கூறியதாவது: கடந்த வாரமே நீதிபதி மலைமீது சென்று ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கினார். சிறுபான்மை ஓட்டுக்காக ஹிந்துக்களுக்கு எதிராக இந்த ஆட்சி நடக்கிறது. நீதிமன்றத்திற்கு இந்த அரசு மதிப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவமதித்துள்ளது.
இன்று மறுபடியும் தீர்ப்பு வழங்கியும் 6:00 மணிக்கும் தீபம் ஏற்றவில்லை. 6:05 மணிக்கு வழங்கிய தீர்ப்பில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுடன் சென்று ஏற்றும்படி சொல்லியும் அனுமதிக்ககவில்லை. இந்தளவு ஏன் ஹிந்துக்கள் மீது விரோதம் எனத்தெரியவில்லை. எனவே வரும் 2026ல் இந்த அரசு படுதோல்வியை சந்திக்கும். அவர்களுக்கு ஹிந்துக்கள் ஓட்டளித்துள்ளனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஹிந்துக்களின் கோயில்களை இடிப்பது, ஹிந்துக்களின் இடத்தை சூறையாடுவது, அறநிலையத்துறையில் ஊழல் செய்வது என செயல்படுகின்றனர். இன்று ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஹிந்துக்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்.
நக்சல் எண்ணத்தில் எம்.பி., இந்த மலைமீது கோழி, ஆடு வெட்டுவேன் என சென்றவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அன்று எம்.பி.,வெங்கடேசன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்கிறார். அவர் முழுக்க முழுக்க நக்சல் எண்ணத்தோடு பேசுகிறார். அவர் மதசார்பற்ற கூட்டணி என்கின்றனர். நாங்கள் அப்படி இருங்கள் என்றுதான் சொல்கிறோம். இப்படி ஒருசார்பாக நடக்கின்றனர்.
இவ்விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது பைத்தியக்காரத்தனமானது. இன்று திருக்கார்த்திகை நாளில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து போவர். எனவே இந்த உத்தரவை போட்டவர்கள் யாராக இருந்தாலும் பைத்தியக்கார மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்களே. இது ஹிந்துக்களுக்கு எதிரானது, இது பக்தர்களை அச்சுறுத்தும் செயல். இவ்வாறு கூறினார்.

