ADDED : நவ 13, 2025 02:01 PM

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் 55 சதவீதத்தில் இருந்து 58 சவீதமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1,829 கோடி செலவாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

